தூக்கம்விற்ற காசுகள்

இருப்பவனுக்கோ வந்துவிட ஆசை

வந்தவனுக்கோ சென்று விட ஆசை
இதோ அயல்தேசத்து ஏழைகளின்
கண்ணீர் அழைப்பிதழ்!
விசாரிப்புகளோடும்
விசா அரிப்புகளோடும் வருகின்ற
கடிதங்களை நினைத்து நினைத்து
பரிதாபப்படத்தான் முடிகிறது!


> நாங்கள் பூசிக்கொள்ளும்
 > சென்டில் வேண்டுமானால்...
 > வாசனைகள் இருக்கலாம்!
 > ஆனால் வாழ்க்கையில்...?
 

> தூக்கம் விற்ற காசில்தான்...

> துக்கம் அழிக்கின்றோம்!

> ஏக்கம் என்ற நிலையிலேயே...

> இளமை கழிக்கின்றோம்!

>

> எங்களின் நிலாக்கால

> நினைவுகளையெல்லாம்...

> ஒரு விமானப்பயணத்தூனூடே

> விற்றுவிட்டு கனவுகள்

> புதைந்துவிடுமெனத் தெரிந்தே

> கடல் தாண்டி வந்திருக்கிறோம்!

>

> மரஉச்சியில் நின்று

> ஒரு தேன் கூட்டை கலைப்பவன் போல!

> வாரவிடுமுறையில்தான்..

> பார்க்க முடிகிறது

> இயந்திரமில்லாத மனிதர்களை!

>

> அம்மாவின் ஸ்பரிசம்

> தொட்டு எழுந்த நாட்கள்

> கடந்து விட்டன!

> இங்கே அலாரத்தின் எரிச்சல் கேட்டு

> எழும் நாட்கள் கசந்து விட்டன!

>

> பழகிய வீதிகள் பழகிய நண்பர்கள்

> கல்லூரி நாட்கள் தினமும் ஒரு இரவு

> நேர கனவுக்குள் வந்து வந்து

> காணாமல் போய்விடுகிறது!

>

> நண்பர்களோடு ஆற்றில்

> விறால் பாய்ச்சல்

> மாட்டுவண்டிப் பயணம்

> நோன்புநேரத்துக் கஞ்சி

> தெல்கா - பம்பரம் - சீட்டு - கோலி என

> சீசன் விளையாட்டுக்கள்!

>

> ஒவ்வொரு

> ஞாயிற்றுக்கிழமையாய் எதிர்பார்த்து...

> விளையாடி மகிழ்ந்த உள்ளுர்

> உலககோப்பை கிரிக்கெட்!

>

> இவைகளை

> நினைத்துப்பார்க்கும்போதெல்லாம்...

> விசாவும் பாஸ்போட்டும் வந்து...

> விழிகளை நனைத்து விடுகிறது.!

>

> வீதிகளில் ஒன்றாய்

> வளர்ந்த நண்பர்களின் திருமணத்தில்!

> மாப்பிள்ளை அலங்காரம்!

>

> கூடிநின்று கிண்டலடித்தல்!

> கல்யாணநேரத்து பரபரப்பு!

>

> பழையசடங்குகள்

> மறுத்து போராட்டம்!

> பெண்வீட்டார் மதிக்கவில்லை

> எனகூறி வறட்டு பிடிவாதங்கள்!

>

> சாப்பாடு பரிமாறும் நேரம்...

> எனக்கு நிச்சயித்தவளின் ஓரப்பார்வை!

> மறுவீடு சாப்பாட்டில்

> மணமகளின் ஜன்னல் பார்வை!

>

> இவையெதுவுமே கிடைக்காமல்

> "கண்டிப்பாய் வரவேண்டும்

> " என்ற சம்பிரதாய அழைப்பிதழுக்காக...

> சங்கடத்தோடு

>

> ஒரு தொலைபேசி வாழ்த்தூனூடே...

> தொலைந்துவிடுகிறது

> எங்களின் நீ..ண்ட நட்பு!

>

> எவ்வளவு சம்பாதித்தும் என்ன?

> நாங்கள் அயல்தேசத்து ஏழைகள்தான்!

>

> காற்றிலும் கடிதத்திலும்

> வருகின்ற சொந்தங்களின்...

> நண்பர்களின் மரணச்செய்திக்கெல்லாம்

>

> அரபிக்கடல் மட்டும்தான்...

> ஆறுதல் தருகிறது!

> ஆம்

> இதயம் தாண்டி

> பழகியவர்களெல்லாம்...

> ஒரு கடலைத்தாண்டிய

> கண்ணீரிலையே...

> கரைந்துவிடுகிறார்கள்;!

>

> "இறுதிநாள்" நம்பிக்கையில்தான்...

> இதயம் சமாதானப்படுகிறது!

> இருப்பையும் இழப்பையும்

> கணக்கிட்டுப் பார்த்தால்

> எஞ்சி நிற்பது இழப்பு மட்டும்தான்...

>

> பெற்ற குழந்தையின்

> முதல் ஸ்பரிசம் முதல் பேச்சு....

> முதல் பார்வை... முதல் கழிவு...

> இவற்றின் பாக்கியத்தை

> தினாரும் - திர்ஹமும்

> தந்துவிடுமா?

>

> கிள்ளச்சொல்லி

> குழந்தை அழும் சப்தத்தை...

> தொலைபேசியில் கேட்கிறோம்!

>

> கிள்ளாமலையே

> நாங்கள் தொலைவில் அழும் சப்தம்

> யாருக்குக் கேட்குமோ?

>

> ஒவ்வொருமுறை ஊருக்கு

> வரும்பொழுதும்...

> பெற்ற குழந்தையின்

> வித்தியாச பார்வை...

> நெருங்கியவர்களின் திடீர்மறைவு

>

> இப்படி புதிய முகங்களின்

> எதிர்நோக்குதலையும்...

> பழையமுகங்களின்

> மறைதலையும் கண்டு...

> மீண்டும்

>

> அயல்தேசம் செல்லமறுத்து

> அடம்பிடிக்கும் மனசிடம்...

> தங்கையின் திருமணமும்...

> தந்தையின் கடனும்...

> பொருளாதாரமும் வந்து...

> சமாதானம் சொல்லி அனுப்பிவிடுகிறது

> மீண்டும் அயல்தேசத்திற்கு!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

அண்மைய செய்திகள்